சீனாவில் உள்ள ஜீஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தை (Zhejiang University of Medicine) சேர்ந்த விஞ்ஞானிகள் கீறல்களில் இருந்து வெளிப்படும் இரத்தப்போக்கை உடனடியாக நிறுத்த ஒருவித உயிரி பசையை (Bio Glue) உருவாக்கி உள்ளனர்.
மருத்துவ துறையில், சிகிச்சையின் போது ஏற்படும் மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு. உடனடியாக இரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போகும் போது தான் பல உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள ஜீஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தை (Zhejiang University of Medicine) சேர்ந்த விஞ்ஞானிகள் கீறல்களில் இருந்து வெளிப்படும் ரத்தப்போக்கை உடனடியாக நிறுத்த ஒருவித உயிரி பசையை (Bio Glue) அண்மையில் உருவாக்கியுள்ளனர். இந்த உயிரி பசை, 20 நொடிகளில் எந்த கீறலை மூடிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த பசையை நீர், ஜெலட்டின் மற்றும் சில வேதி பொருட்களை கொண்டு நச்சு பொருள் இல்லாத ஜெல்லாக தயாரித்துள்ளனர். இந்த பசை கீறல் அல்லது காயத்தின் மீது வைக்கப்பட்டவுடன் யூவி (uv) ஒளி மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பசை UV ஒளி பட்டவுடன் திடமாகி நீர் கூட புக முடியாத படி 6mm அளவுக்கு பரவி, கீறலை மூடி விடும். இதனால் ரத்தக்கசிவு உடனடியாக நிறுத்தப்படும். இதன் பிறகு எந்த ஒரு தையலும் தேவை இல்லை. காரணம் இந்த பசையே அந்த அளவு பாதுகாப்பானது.
ஏற்கனவே பயன்பாட்டில் சில வகை பசைகள் இருந்தாலும் அவற்றில் சில குறைபாடுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சில வகை பசைகள் ஈரமான திசுக்களில் சரியாக ஒட்டாது. சில வகைகளோ உடலின் உறுப்புகளில் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தை தாங்கும் படி இருப்பதில்லை. ஆனால் இந்த பசை ஒரு இணைப்பு திசு போலவே செயல்படும் என்பதால் இது ஈரமான வழவழப்பான திசுக்களில் உள்ள கீறலை கூட மூடி ரத்த கசிவை நிறுத்தி விடும்.
மனித இணைப்பு திசு கட்டமைப்பின் அடிப்படையில் இந்த ஜெல் இருப்பதால், இது உடலின் அனைத்து உள்ளுறுப்புகள் மற்றும் தமனிகளுக்கு ஏற்றதாக உள்ளது.
உறுப்பில் உள்ள திசு மற்றும் ஜெல்லுக்கு இடையில் இருக்கும் கரிம சேர்மங்கள், UV கதிர் படும் போது, திசுக்களின் புரோட்டினில் உள்ள அமினோ குழுக்களுடன் வினைபுரிந்து வலுவான பிணைப்புகளை உருவாக்குகின்றன. இதனால் இவற்றால் அதிக அழுத்தத்தையும் தாங்க முடியும். இந்த ஜெல் 290 mmHg இரத்த அழுத்தம் வரை தாங்க கூடியது. அதாவது வழக்கமாக தற்போது மருத்துவர்கள் பயன்படுத்தும் பசைகளை விட மிக அதிக அழுத்தத்தை தாங்க கூடியது. இதனால் இந்த ஜெல் மூலம் இதயத்தில் ஏற்படும் துளை, காயங்கள் மற்றும் ரத்த கசிவை கூட சரி செய்ய முடியும்.
இந்த பசை இன்னும் மனிதர்களில் சோதனை செய்யப்படவில்லை. ஆனால் பன்றிகள் மற்றும் முயல்களிடம் சோதனை செய்ததில், பொதுவாக அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல்கள் அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் சில வகை பசைகளை விட திறன் வாய்ந்ததாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.
சோதனைகளின் போது முயலின் கல்லீரலில் ஏற்பட்டிருந்த இரத்தக் கசிவை சில நொடிகளில் இந்த பசை நிறுத்தியுள்ளது. அதே போல பன்றிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சையின் போது கரோட்டி தமனியின் துளையை ஒரு நிமிடத்திற்குள் மூடி சரி செய்துள்ளது. மேலும் இதய சுவரில் இருந்த துளைகளையும் மூடியுள்ளது. அதே சமயம் இதை கொண்டு மூடி ரத்த கசிவை நிறுத்திய இடத்தில் மிக சிறிய அளவு வீக்கமே காணப்பட்டுள்ளது. சிகிச்சை மேற்கொண்ட பன்றிகளை தொடர்ந்து கண்காணித்த போது அவற்றிற்கு எந்த கோளாறுகளும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.